17/02/2024
சிதைந்த கனவுகள் ...
Northern uni ரம்பா கணவர் இந்திரகுமார் பத்மநாதன், ஹரிஹரனை மட்டும் வைத்து இசை நிகழ்ச்சியை நடத்தி , ஒரு வெள்ளோட்டம் பார்த்து , இன்னும் பல நிகழ்ச்சிகளை தொடர்ந்து செய்திருக்கலாம். சாம்பார் இசை நிகழ்ச்சி கரும் புள்ளியாகிவிட்டது. யார் கொடுத்த இத்துப் போன கயிறோ தெரியாது. அது அறுந்து இசை நிகழ்ச்சி முடிந்து , அந்த மகிழ்ச்சியைக் கூட அனுபவிக்க முடியாது யாழ்ப்பாணத்தை விட்டு அடுத்த நாளே டை கோட் மாலை மரியாதை எதுவுமே இல்லாமல் இந்திரகுமாருக்கு, குடும்பத்தோடு வெளியேற வேண்டி வந்தது.
இந்திரகுமாரது Northern uniயின் நோக்கம் நல்லதேயானாலும், அதை உணரக் கூடியவர்கள் கல்வி சமூகத்திலும் குறைவு என்பதை விட , இப்படியான மாற்றங்களை வரவே விடக் கூடாது என்போரே அதிகம் என்பதே உண்மை. இது இன்னொரு அரசியல்.
இலவசங்களால் அனைத்து வளமும் கொண்ட ஒரு அழகிய நாட்டையும் , மக்களையும் கையேந்த பழக்கிய நாட்டு தலைவர்களது அரசியல் சித்தாந்தங்கள் , இன்றைய நாட்டு தலைவர்களே , உலக நாடுகளிடம் போய் , பிச்சை எடுக்கிறோம் என சொல்லும் அளவுக்கு கொண்டு சென்று விட்டுள்ளது.
அதுபோல தனியார் கல்வி நிறுவனங்களால் , கல்வியை இலவசமாகக் கொடுக்க முடியாது. இலங்கை பல்கலைக் கழக அனுமதி கிடைக்காத , பணம் படைத்த மாணவர்களால் வெளிநாடு சென்று அல்லது தற்போது கொழும்புக்கு சென்று கற்கலாம். அதை விட வசதி குறைந்த கட்டணத்தில் , ஊருக்குள் கற்கலாம் என்றால் அதுவும் ஒரு நல்ல வாய்ப்பேயாகும். வெளிநாடுகளில், வாழும் ஊரில் அனைத்தும் உள்ளது. இலங்கை போன்ற நாடுகளில்தான் மூக்கு துடைக்கவும் தலைநகருக்கு போக வேண்டியுள்ளது.
பெரிய கட்டிடமும் , நிலமும் இருந்தால்தான், அது பல்கலைக் கழகம் என சிலரது கருத்துகளை காணும் போது சிரிப்பு வருகிறது. சிங்கள பகுதிகளில் சிங்களவர்கள் அனுமதிக்காத ஆங்கில பள்ளிகளை, அப்படித்தான் அன்று ஆங்கிலேயர் யாழ்பாணத்தில் உருவாயினர். அவற்றிலிருந்தே வடக்கில் கல்வி சமூகம் ஒன்று உருவாகியது. யாழ்பாணத்துக்கு பல்கலைக் கழகம் ஒன்று தேவையே இல்லை என தடுத்ததும் , அதே சமூகம்தான்.
பல்கலைக் கழகம் என்பது காணி பரப்பளவு அல்ல , அங்கு கொடுக்கப்படும் கல்விதான். வெளிநாட்டு குழந்தைகளிடமாவது இவை குறித்து கேளுங்கள். தவிர இணைய வழியிலேயே அனைத்தும், ஒரு கையடக்க மொபைலுக்குள் சுருங்கிவிட்டது என்பதாவது தெரியுமா?
அதேபோல இறுகிப் போன மனங்கள் , சைகாலஜிக்கலாக மனநலம் பெற , ரிலாக்சாக, கூத்தும் , கும்மாளமும் தேவை. பொழுது போக்குகள் இல்லாத போது போதை பொருட்களுக்கு இளையோர் அடிமையாவது விந்தை அல்ல. மன அழுத்தங்களால்தான் குற்றச் செயல்கள் அதிகரிக்கின்றன. இந்தியாவில்தான் சினிமா மோகம் மிக அதிகம். அங்கு இலங்கை அளவு போதை அடிமைகள் இல்லை, குறைவுதான். இளைஞர்களிடமுள்ள மனஉளைச்சல் சீர்கேடுகளிலிருந்து (PTSD) புனர்வாழ்வு கொடுப்பது அரசியல்வாதிகளது கடமை. ஆனால் அவர்களே பதவி மோக நோயில் உள்ளனர்?
Northern uni இந்திரகுமார், இன்றைய சூழலை உணர்ந்து செயல்பட்டு Northern uni கல்வியால் இளையோருக்கு உதவ வேண்டும். இந்திரகுமார் போல , புலம் பெயர் தமிழ் ஆர்வலர்கள் அநேகர் , வடக்குக்கு போனதை விட வேகமாக ஆளைவிடு சாமி என ஓடி வந்துள்ளார்கள். அதே நேரம் , இந்திரகுமார் போன்ற ஒரு சிலராலேயே சிலவற்றை செய்ய முடிகிறது. அதற்கு பணம் மட்டுமல்ல , அரசியல் ஆதரவும்தான் காரணம். அவை தொடர்ந்தால் , இன்னும் பலர் நாட்டுக்கு வருவார்கள். உதவுவார்கள்: இந்த உணர்வு , அடுத்த புலம் பெயர் புதிய தலைமுறையிடம் வராது. புலம் பெயர் புதிய தலைமுறையினரது நாடு , இலங்கை அல்ல.
தவறான முருங்கை கொப்பு ஆலோசனைகளை புறம்தள்ளி , பேசுவுவதையும் , அறிக்கை விடுவதையும் தவிர்த்து , Northern uni மேம்பட நடப்பதே சிறப்பு! வாழ்த்துகள்!
Copied
ஜீவன்