13/07/2024
புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக்
பவா செல்லதுரை சிறுகதைகள்
RV Tamil short stories 24 பிப் 2019 1 Minutes
என் பள்ளி நாட்களில் நான் வசித்த கிராமம் மானாம்பதி. உத்திரமேரூரிலிருந்து காஞ்சிபுரம் போகும் வழியில் இருக்கிறது. அந்தக் காலத்தில் நெசவாளர் கிராமம். நிறைய பேர் வீட்டில் தறி இருக்கும். வறண்ட கிராமம்தான். வீடுகளில் கிடைக்கும் கிணற்றுத் தண்ணீர் கொஞ்சம் உப்பாக இருக்கும். ஏரி உண்டு, ஆனால் அனேகமாக தண்ணீர் இருக்காது. அருகில் ஓடும் செய்யாறு நதியிலும் தண்ணீரைப் பார்த்ததில்லை. ஊரிலிருந்து காஞ்சிபுரம் போகும் சாலையிலேயே இரண்டு மைல் நடந்தால் அது வந்தவாசி-காஞ்சிபுரம் சாலையை சந்திக்கும். அந்த சந்திப்பை – கூட்ரோடு என்று சொல்லுவோம் – தாண்டினால் இன்னும் வறண்ட குன்றுகள் இருக்கும். நெடுங்கல் என்று பேர். ஓணானும் அரணையும் சில சமயம் ஓரிரு உடும்புகளும்தான் தென்படும். ஒரு குகை இருந்தது, அதற்குள் ஒரு முறை போயிருக்கிறோம். கூட வந்த தெய்வசிகாமணி குகையின் கூரையில் ஒரு மலைப்பாம்பைப் பார்த்ததாக சொன்னதால் அடுத்த முறை உள்ளே போக யாருக்கும் தைரியம் இருந்ததில்லை.
பவா செல்லதுரை பல வருஷங்களுக்குப் பிறகு அந்த வறண்ட நிலப்பரப்பை நினைவு கூர வைக்கிறார். இவர் வாழும் திருவண்ணாமலையும் இப்படிப்பட்ட நிலப்பரப்புதானோ என்னவோ. எனக்குத் தெரிந்து இந்த நிலப்பரப்பை, இந்த கிராமங்களை எழுதும் ஒரே எழுத்தாளர் இவர்தான். அதற்காகவே இவரைக் கொண்டாட வேண்டும். கண்மணி குணசேகரனும் எக்பர்ட் சச்சிதானந்தமும் இந்த உலகத்தை – ஆனால் வேறு வகைகளில் காட்டுகிறார்கள். அவர்கள் எழுத்தில் தெரிவது சமூகநிலை. இவர் எழுத்தில் எனக்கு மீண்டும் மீண்டும் தெரிவது அந்த நிலம்.
பவாவின் பெயர் அவ்வப்போது இலக்கிய நண்பர்கள் பற்றி எழுத்தாளர்கள் பேசும்போது அடிபடும். பல எழுத்தாளர்களோடு அவருக்கு உள்ள நட்பு, இலக்கிய வாசிப்பை ஊக்குவிக்க அவர் எடுக்கும் முயற்சிகள், (எழுத்தாளர் சந்திப்புகள், உரைகள் ஏற்பாடு செய்வது) அவரது விருந்தோம்பல், வம்சி பதிப்பகம், அவரது மனைவி ஷைலஜாவின் மொழிபெயர்ப்புகள் என்று பலதும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. அவை எல்லாம் அவரது எழுத்துக்களை ஓரளவு மங்கவைத்துவிட்டனவோ என்று எனக்கு ஒரு நினைப்பு உண்டு.
பவாவின் இரண்டு கதைகள் ஜெயமோகனின் சிறந்த சிறுகதைகள் பட்டியலில் இடம் பெறுகின்றன – ஏழுமலை ஜமா மற்றும் ஓணான் கொடி சுற்றிய ராஜாம்பாள் நினைவுகள். எஸ்.ரா.வின் பட்டியலில் இவர் கதைகள் இடம் பெறவில்லை.
நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை என்ற சிறுகதைத் தொகுப்பை சமீபத்தில் படித்தேன். வேட்டை, பச்சை இருளன், சத்ரு கதைகளுக்காகத்தான் இவரை கொண்டாட வேண்டும் என்று தோன்றுகிறது.
பிற சிறுகதைகளின் பெரிய பலம் நம்பகத்தன்மை. குறிப்பாக அவர் காட்டும் வாத்தியார்கள் உலகம் எனக்கு ஓரளவு தெரிந்த உலகம். என் பள்ளி ஆசிரியர்களை நினைவுபடுத்தியது. மிக இயல்பான சித்தரிப்பு.
பல சிறுகதைகளில் அவர் கோடி காட்டுவது பெரிய நாவலுக்கான கரு என்று தோன்றுகிறது. இன்னும் முனைந்து விரிவுபடுத்தி இருக்கலாம் என்று தோன்ற வைக்கிறது. சிதைவு ஒரு உதாரணம். எப்போதும் அடிக்கும் அப்பா, வாலிபனின் பாலியல் இச்சை ஆரம்பம்… வலி சிறுகதையும் அப்படித்தான் – கோடி காட்டப்படும் திருடும் குறவர்கள் வாழ்வு முறை பெரிய நாவலுக்கான கரு கொண்டது.
மற்றவற்றில் ஏழுமலை ஜமா நல்ல சிறுகதை. கூத்து வாத்தியார் வாழ்க்கைத் தேவைகளுக்காக என்னென்னவோ செய்தாலும் கூத்துக்கு மீளும் தருணம் சிறப்பாக வந்திருக்கிறது.
ஓணான் கொடி சுற்றிய ராஜாம்பாள் நினைவுகள் எனக்கு புரியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். முதல் வாசிப்பில் ஏன் புரியவில்லை என்பதுதான் புரியவில்லை. நன்றாக எழுதப்பட்ட சிறுகதை. சிறுவனின் கற்பனை உலகம் நன்றாக வந்திருக்கிறது.
மற்ற கதைகளைப் படிக்கலாம். படித்தே ஆக வேண்டியவை அல்ல. பிடி சிறுகதை நான் படித்த பள்ளிகளை, அங்கே “ப்ரைவேட்” எடுத்த வாத்தியார்களை நினைவூட்டுகிறது. வேறு வேறு மனிதர்கள் சிறுகதையும் நான் படித்த கிராமப் பள்ளிகளை நினைவூட்டுகிறது. எஸ்.ஆர். (Service Register) பிரச்சினை என்று அலைந்த வாத்தியார்களை நான் பார்த்திருக்கிறேன்.
கரடி சிறுகதையில் தன் கலை எடுபடவில்லை என்ற ஆதங்கமும் மற்றவர் கலையை பாராட்டும் கலைஞனின் உள்ளமும் நன்றாக வந்திருக்கிறது. மண்டித்தெரு பரோட்டா சால்னா சிறுகதையில் சிறு வயதில் பட்ட கஷ்டங்கள், ஓடிப்போன அம்மா-அப்பா-மகன் உறவின் சித்தரிப்பு. சிங்காரக்குளம் சிறுகதையில் றத்தெருக்காரர்களுக்கு ஊர்க் குளம் மறுக்கப்படுவது மிக இயல்பாக சித்தரிக்கப்படுகிறது. நீரோட்டம் சிறுகதையின் முத்தாய்ப்பு அருமை. என் திருமணத்துக்கு தன் வளையலைக் கழற்றிக் கொடுத்தவளை நான் ஏமாற்றமாட்டேன் என்று அந்தப் பெண் சொல்லும் இடம் கவிதை. கால் சிறுகதையை ஒரு உண்மைச் சம்பவத்தை வைத்து எழுதி இருக்கிறார். கமல் தன் ரசிகர் மன்றக் கூட்டம் ஒன்றுக்கு ஜெயகாந்தனை அழைத்ததாகவும், கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்த ஜேகேவைப் பார்த்து கூட்டம் கத்தியதாகவும், கமல் தலை குனிந்ததாகவும் சொல்வார்கள்.
நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை சிறுகதையையும் குறிப்பிட வேண்டும். அண்மை கிராமமான மானாம்பதி கண்டிகையை நினைவுபடுத்தியதற்காக! இது மானாம்பதியிலிருந்து இரண்டு மைல் தூரத்தில் இருந்தது. ஏறக்குறைய கிறிஸ்துவ கிராமம். அந்த கிராமத்தில் காலை வரும் “பஜனை” கோஷ்டி, பாடல்கள் எல்லாவற்றையும் நினைவுபடுத்தியது.
பவாவின் சில சிறுகதைகளை இங்கே படிக்கலாம்.
தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் எழுத்தாளர்கள்
தொடர்புடைய சுட்டி: பவாவின் தளம்