
19/08/2024
😭விலைமாது விடுத்த கோரிக்கை..! படித்ததில் அதிர்ந்து போன கவிதை..!
ராமன் வேசமிட்டிருக்கும் பல ராட்சசனுக்கு என்னை தெரியும். பெண் விடுதலைக்காக போராடும் பெரிய மனிதர்கள் கூட தன் விருந்தினர் பங்களா விலாசத்தை தந்ததுண்டு.
என்னிடம் கடன் சொல்லிப் போன கந்து வட்டிக்காரகளும் உண்டு. சாதி சாதி என சாகும் எவரும் என்னிடம் சாதிப் பார்ப்பதில்லை. திருந்தி வாழ நான் நினைத்தபோதும் என்னை தீண்டியவர்கள் யாரும் திரும்பவிட்டதில்லை.
பத்திரிக்கையாளர்களே! விபச்சாரிகள் கைது என்றுதானே விற்பனையாகிறது.. விலங்கிடப்பட்ட ஆண்களின் விபரம் வெளியிடாது ஏன்...? பெண்களின் புனிதத்தை விட ஆண்களின் புனிதம் அவ்வளவு பெரிதா?
காயிந்த வயிற்றுக்கு காட்டில் இரை தேடும் குருவியைப் போல் என்னை யாரும் பரிகசிக்கவில்லை. கட்டில் மேல் கிடக்கும் இன்னொரு கருவியைப் போலத் தான் என்னை கையாளுகிறார்கள்.
நான் இருட்டில் பிணமாக மாறினால்தான் பகலில் அது பணமாக மாறும். பின்தான் என் குடும்பத்தின் பசியாறும். நிர்வாணமே என் நிரந்தர உடையானல்தான் சேலை எதற்கென்று நினைத்ததுண்டு.
சரி காயங்களை மறைப்பதற்கு கட்டுவோம் என்று கட்டிக்கொண்டு இருக்கிறேன். என் மேனியில் இருக்கும் தழும்புகளைப் பார்த்தால் வரி குதிரைகள் கூட வருத்தம் தெரிவிக்கும். எதையும் வாங்க வசதியில்லாத எனக்கு விற்பதற்க்காவது இந்த உடம்பு இருக்கிறதே!
நாணையமற்றவர் நகங்கள் கீறி கீறி என் நரம்பு வெடிக்கிறதே! வாய்திறக்க முடியாமல் நான் துடித்த இரவுகள் உண்டு எலும்புகள் உடையும் வரை என்னை கொடுமைப் படுத்திய கொள்கையாளர்களும் உண்டு. ஆண்கள் வெளியில் சிந்தும் வேர்வையை என்னிடம் ரத்தமாய் எடுத்து கொள்கிறார்கள்.
தூறல் சிந்தாத வான் மேகமில்லை. கீறல் படாத வேசி தேகமில்லை. என்னை வேசி என்று ஏசும் எவரைப் பற்றியும் கவலைப் பட்டதே இல்லை.. ஏனெனில் விதவை - விபச்சாரி முதிர்கன்னி - மலடி ஓடுகாலி - ஒழுக்கங்கெட்டவள் இதில் ஏதேனும் ஒரு பட்டம் அநேக பெண்களுக்கு அமைந்திருக்கும்.
இது இல்லாமல் பெண்கள் இல்லை. எப்போதும் இழிவு சொல் ஆண்களுக்கு இல்லை. முதுமை என்னை முத்தமிடுவதற்க்குள் என் மகளை மருத்துவராய் ஆக்கிவிட வேண்டும். என் மீது படிந்த தூசிகளை அவளை கொண்டு நீக்கி விட வேண்டும்.
இருப்பினும் இந்த சமூகம் இவள் மணிமேகலையை என்பதை மறந்துவிட்டு மாதவியின் மகள் என்பதை மட்டுமே ஞாபகம் வைத்திருக்கும். இறுதியாக இரு கோரிக்கை. என்னை மென்று தின்ற ஆண்களே!
மனைவிடமாவது கொஞ்சம் மென்மையாக இருங்கள். எங்களுக்கு இருப்பது உடம்பு தான் இரும்பல்ல. என் வீதி வரை விரட்டிவரும் ஆண்களே! தயவு செய்து விட்டுவிடுங்கள். நான் விபச்சாரி என்பது என் வீட்டுக்கு தெரியாது. இப்படிக்கு - அவள்....
🙏🙏🙏