30/07/2021
கோத்தாபாய கடற்படை முகாம் காணி அபகரிப்பு; கலந்துரையாடலின் பின்னரே நிலஅளவைதொடர்பில் முடிவெடுக்கப்படும், அதுவரை நில அளவைச் செயற்பாடுகள் நிறுத்திவைப்பதாக முடிவு
முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் கிழக்கு, வட்டுவாகல் கோத்தாபாய கடற்படை முகாம் காணி அளவீடு தொடர்பில் கடற்படை, காணிகளுக்குரிய மக்கள் மற்றும், உரிய திணைக்கள அதிகாரிகளுடன் மாவட்டசெயலகத்தில் ஓர் கலந்துரையாடல் இடம்பெற்று, அந்த கலந்துரையாடலின் அடிப்படையிலேயே நில அளவீடுதொடர்பில் முடிவு எடுக்கப்படும் எனவும், அதுவரை நில அளவைச் செயறபாடுகள் இடம்பெறாது என்ற இணக்கமான முடிவொன்று எடுக்கப்பட்டது.
காணி அளவீடுதொடர்பில் நிலஅளவைத் திணைக்களத்தினால் அனுப்பிவைக்கப்பட்ட கடிதம்.
முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் கிழக்கு, வட்டுவாகல் பகுதியில் கோத்தாபாய கற்படை முகாம் கடற்படையினர் அபகரித்துள்ள தமிழ் மக்களுக்குரிய சுமார் 617ஏக்கர் காணிகளை அளவீடுசெய்து சட்டரீதியாக சுவீகரித்து கடற்படையினருக்கு வழங்குவதுதொடர்பில், முல்லைத்தீவு பிரதேச நில அளவைத் திணைக்களத்தின் அரச நில அளவையாளர் பா.நவஜீவன், 08.07.2021 ஆம் திகதியிடப்பட்ட கடிதம் ஒன்றினை காணி உரிமையாளர்களான தமிழ் மக்களுக்கு அனுப்பிவைத்திருந்தார்.
குறிப்பாக அக் கடிதத்திலே, கடந்த 2021.05.12ஆம் திகதியன்று முல்லைத்தீவு அரசாங்க அதிபர் மற்றும் கரைதுரைப்பற்று பிரதே செயலாளர்களுடனான கலந்துரையாடலின் அடிப்படையில், நிறுத்திவைக்கப்பட்டிருந்த நில அளவையானது காணி எடுத்தற் சட்டம் (அத்தியாயம் 450) 05 ஆம் பிரிவின் (1)ஆம் உட்பிரிவின் பிரகாரம் காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சின் கட்டளை நிமித்தம், நில அளவை நாயகத்தால் அளிக்கப்பட்ட கட்டளையின் பிரகாரம், முல்லைத்தீவு மாவட்ட கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராம சேவையாளர் பிரிவின் முள்ளிவாய்க்கால் கிராமத்தில் அமைந்துள்ள காணியினை பிரதான கடற்படை முகாம் அமைப்பதற்காக சுவீகரிக்கும் பொருட்டு நிலஅளவை செய்வதற்காக 2021.07.29 ஆம் திகதி காலை 9.00 மணிக்கு வருகை தந்து தங்கள் காணிகளின் எல்லைகளையும் விபரங்களையும் இனங்காட்டுப்பம்டி கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள் எனக்குறித்த கடித்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதேவேளை அவரவரது காணியினை உறுதிப்படுத்தும் ஆவணத்தையும் ஆவணத்தின் பிரதி ஒன்றையும் எடுத்துவரும்படியும், குறித்த கடிதத்தின் மூலம் காணி உரிமையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
இந் நிலையில் குறித்த கடிதத்தின் அறிவிப்பினை ஏற்கமறுத்த காணிகளுக்குரிய தமிழ் மக்கள், தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி 29.07.2021இன்று ஆர்பாட்டம் ஒன்றினை மேற்கொள்ளும் முடிவிற்கும்வந்திருந்தனர்
ஆர்ப்பாட்ட ஏற்பாடுகளில் ஈடுபட்டவர்களை அச்சுறுத்திய இராணுவத்தினர்
அதற்கமைய காலை 07.00மணியளவில் துரைராசா ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன், காணிகளுக்குரிய மக்கள்சிலர் உள்ளிட்டவர்கள் வட்டுவாகல் சப்தகன்னியர் ஆலயத்திற்கு முன்பாக இவ்வார்பாட்டத்திற்குரிய ஆயத்தங்களில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த இடத்திற்கு வருகைதந்த இராணுவத்தினர் சிலர் , ஆர்ப்பாட்டக்காரர்களை அச்சுறுத்துகின்றவகையில் செயற்பட்டதுடன், ஆர்ப்பாட்டத்திற்கான முயற்சிகளை குழப்புகின்றவகையிலும் செயற்பட்டிருந்தனர்.
நில அளவீட்டுத்திணைக்கள வாகனத்தை வழிமறித்த ஆர்ப்பாட்டக்காரர்கள்.
நில அளவீடுகளைச் செய்வதற்காக அவணங்களுடன் 09.00மணிக்கு வருகைதருமாறு கடிதத்தின் மூலம் காணிக்குரிய தமிழ் மக்களுக்கு அறிவித்தல் வழங்கியிருந்ந நில அளவைத் திணைக்களம், குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னர் 07.30மணிக்கே நில அளவீட்டுச் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்காக வட்டுவாகல் கோத்தாபாய கடற்படை முகாம் வளாகத்திற்கு வருகைதந்திருந்தனர்.
நில அளவைத் திணைக்களத்தின் இத்தகைய செயற்பாடானது காணிகளுக்குரிய தமிழ்மக்களுக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தது.
தொடர்ந்து அங்கு நில அளவீட்டிற்கென வருகைதந்திருந்த முல்லைத்தீவு பிரதேச நில அளவைத் திணைக்களத்தின் அரச நில அளவையாளர் பா.நவஜீவன் தலைமையிலான குழுவினர் கடற்படை முகாமிற்குள் செல்லமுற்பட்டபோது அவர்கள் வருகைதந்த வாகனத்தினை முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும், பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டவர்கள் வழிமறித்தனர்.
அவர்கள் வாகனத்தை வழிமறிப்பதற்குள் வாகனத்தை விட்டிறங்கிய நிலஅளவையாளர் பா.நவஜீவன் கடற்படை முகாமிற்குள் சென்றிருந்தார்.
தொடர்ந்து தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி பதாதைகளை ஏந்தி, கோசங்களை எடுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் குவிக்கப்பட்ட பாதுகாப்புத்தரப்பு.
இவ்வாறு ஆர்ப்பாட்டம் இம்பெற்றுக்கொண்டிருக்கும்போது கடற்படை முகாமின் உட்புறமாக கலகம் அடக்கும் கடற்படையினர் களமிறக்கப்பட்டிருந்தனர்.
அதேவேளை போலீசார் மற்றும், விசேட அதிரடிப்படையினர், கடற்படையினர், புலனாய்வாளர்கள் என பாதுகாப்புத் தரப்பினர் ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்தைச்சூழ நிறுத்திவைக்கப்பட்டிருந்தனர்.
அத்தோடு கடற்படையினர் மற்றும் புலனாய்வாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை புகைப்படம் மற்றும், காணொளி எடுத்து அச்சுறுத்தும் வகையிலும் செயற்பட்டிருந்தனர்.
இணக்கப்பாட்டிற்குவந்த போலீஸ் மற்றும், ஆர்ப்பாட்டக்காரர்கள்
இவ்வாறாக தொடர்ச்சியாக போராட்டம் இடம்பெற்றிருந்த நிலையில், நிலஅளவைச் செயற்பாடுகளை நிறுத்திவைப்பதெனவும், பிறிதொருநாளில் மாவட்டசெயலகத்தில் இக் காணிப் பிரச்சினைதொடர்பில் காணி உரிமையாளர்கள், கடற்படை மற்றும் உரிய அரசதிணைக்கள அதிகாரிகள் ஆகியோர் ஒன்றுகூடி கலந்துரையாடி, அக்கலந்துரையாடலின் முடிவின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்வதாகவும், அதுவரை நிலஅளவைச் செயற்பாடுகளை நிறுத்திவைப்பது என்ற இணக்கமான கருத்தை போலீசார் ஆர்ப்பாட்டக்காரர்களிடம் தெரிவித்தனர்.
போலீசாரின் இந்த இணக்கமான கருத்தையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தை முடித்துக்கொள்ளும் முடிவிற்குவந்தனர்.
நிலஅளவை இடம்பெறவேண்டுமென வலியுறுத்திய தெற்கைச் சேர்ந்த சீன நாட்டவர்.
தென்னிலங்கையில் வசித்துவருகின்ற சீன நாட்டவர் ஒருவருக்கு குறித்த கோத்தாபாய கடற்படை முகாம் அமைந்துள்ள பகுதியில் சுமார் 49ஏக்கர் காணியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந் நிலையில் குறித்த சீன நாட்டைச்சேர்ந்தவர் ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற பகுதிக்கு வருகைதந்து தனது காணிகளுக்குரிய நட்ட ஈட்டைப் பெறுவதற்கும், இதுவரைகாலம் அங்கு கடற்படை இருந்து தனது காணியைப் பயன்படுத்தியமைக்கான நட்டையீட்டைப் பெறுவதற்கும் கட்டாயம் அங்கு நில அளவீடு இடம்பெறவேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.
குறித்த நபரின் இத்தகைய கருத்திற்கு அங்கிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது கடுமையான கண்டனங்களை வெளியிட்டிருந்தனர்.
குறிப்பாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் சீனச்சிங்களவர் அங்கிருந்து வெளியேறவேண்டும் என கோசம் எழுப்பியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து ஏனைய ஆர்ப்பாட்டக்காரர்களும் குறித்த நபர் அங்கிருந்து ளெியேறவேண்டுமெனக் கோசம் எழுப்பியதைத் தொடர்ந்து ஆர்பாட்ட இடத்திலிருந்து வெளியேறியிருந்தார்.
மக்கள் பிரதிநிகளை தனியே அழைத்த போலீசார்; ஏற்க மறுத்த மக்கள் பிரதிநிகள்
இந் நிலையில் ஆர்ப்பாட்டத்தை நிறுத்தி ஓர் இணக்கப்பாட்டிற்கு வருவதற்காக தனியே பேசவேண்டுமென, மக்கள் பிரதிநிகளான சாள்ஸ் நிர்மலநாதன், கஜேந்திரகுமார் பென்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், துரைராசா ரவிகரன், எம்.கே.சிவாஜிலிங்கம், சிவசக்தி ஆனந்தன், வினோ நோகராதலிங்கம் ஆகியோரை போலீசார் கடற்படை முகாமிற்குள் அழைத்தனர்.
போலீசாரின் இந்த அழைப்பை ஏற்கமறுத்த மக்கள் பிரதிநிதிகள் எதைத் தெரிவிப்பதாக இருந்தாலும் மக்களுக்குமுன் வெளிப்படையாகத் தெரிவிக்குமாறு தெரிவித்திருந்தனர்.
நில அளவையாளரை கடற்படை முகாமிற்கு வெளியே அழைத்த ஆர்ப்பாட்டக்காரர்கள்....
அதனைத் தொடர்ந்து முல்லைத்தீவு பிரதேச நில அளவைத் திணைக்களத்தின் அரச நில அளவையாளர் பா.நவஜீவன் கடற்படை முகாமிற்குள் இருந்த நிலையில் அவரை வெளியே வருமாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் அழைத்தனர்.
அதற்கு குறித்த நில அளவையாளர், தனக்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்கள் தாக்குவார்களோ என்ற அச்சம் இருப்பதாத் தெரிவித்து வெளியே வருவதற்கு அவர் மறுப்புத் தெரிவித்தார்.
நில அளவையாளரின் கருத்தை நிராகரித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், தாங்கள் தாக்கமாட்டோம் எனவும் வெளியே வந்து தமக்கு ஒரு முறையான முடிவைத் தெரிவிக்குமாறும் ஆர்ப்பாட்டக்காரர்கள் அவரை அழைத்தனர்.
எனினும் அவர் வெளியே வராததுடன், தாம் மாவட்ட நிலஅளவைத் திணைக்கள அதிகாரியுடன் தொலைபேசியில் பேசிவிட்டு வருவதாகக்கூறி கடற்படை முகாமிற்குள்ளேயே இருந்தார்.
பிரதானவாயில் அருகில் இருந்த ஆர்ப்பாட்டக்காரர்களை அங்கிருந்து விலகிச்செல்ல உத்தரவிட்ட கடற்படை
கோத்தாபாய கடற்படை முகாம் பிரதான வாயில் அருகாமையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், ஆர்ப்பாட்டக்காரர்களை அங்கிருந்து விலகி பிரதான வாயிலுக்கு முன்பாகவுள்ள பாதுகாப்பு வரிலுக்கு வெளியே செல்லுமாறு கடற்படையினர் உத்தரவிட்டனர்.
அதற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் அவ்வாறு வெளியே செல்லமுடியாதென மறுத்து கோசங்களை எழுப்பினர். பின்னர் மெதுவாக அங்கிருந்து விலகி பாதுகாப்பு வரியலுக்கு வெளியேவந்தனர்.
இந் நிலையில் உட்பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கலகம் அடக்கும் கடற்படையினர் வெளியே கொண்டுவரப்பட்டு பாதுகப்புக்கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
தந்திரமாக அளவீடுசெய்ய முயன்ற நில அளவையாளர்கள்; வீதிமறியலில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கும்போது, நில அளவைத் திணைக்களத்திலிருந்து வேறு வாகனம் ஒன்றில் நில அளவையாளர்கள் ஏற்றிவரப்பட்டு, கடற்படை முகாமின் பிறிதொரு வாயிலூடாக அவர்கள் கடற்படை முகாமிற்குள் நுழைந்து, அளவீடுசெய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதனை அறிந்த ஆர்பாட்டக்காரர்கள் நில அளவையாளர்கள் வெளியே வரவணே்டுமென கோசங்களை எழுப்பினர்.
குறிப்பாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் முல்லைத்தீவுப் பிரதேச நில அளவையாளர் பா.நவஜீவனின் பெயரைக்குறிப்பிட்டு " துரோகி நவஜீவனே.. வெளியே வா.." என கோசம் எழுப்பினார்.
அத்தோடு ஆர்ப்பாட்டக்காரர்கள் பரந்தன் - முல்லைத்தீவு பிரதான வீதியில் அமர்ந்து, சாலைமறியல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
இதனால் பரந்தன் - முல்லைத்தீவு வீதியில் சிலமணிநேரம் போக்குவரத்துத் தடை ஏற்பட்டிருந்தது.
ஆர்பாட்டக்காரர்களுக்கும், பயணிகள் சிலக்கும் முறுகல்...
இவ்வாறாக சில மணிநேரம் சாலைமறியலில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஈடுபட்டதால், வெய்யிலில் வீதியில் நின்ற பயணிகளுக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் சிறிய முறுகல் நிலை ஏற்பட்டது.
குறிப்பாக சில பயணிகள் வழியை விடுமாறு ஆர்ப்பாட்டக்காரர்களைக் கோரியபோது, தமது காணிக்கு தீர்வுகிடைத்தால்தான் வீதியை விட்டுவிலகுவோமென ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
இதனால் கொதிப்படைந்த பயணிகள் சிலர் ஆர்பாட்டக்காரர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தனர்.
அவ்வாறு செல்லவேண்டுமாயில் தமக்கு மேலால் வாகனங்களை ஏற்றிச்செல்லுமாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பயணிகளிடம் தெரிவித்தனர்.
அத்தோடு ஆர்பாட்டக்காரர்கள் வீதியின் குறுக்கே தகரப் பந்தல் அமைத்து அமரவுள்ளதாகத் தெரிவித்து, பந்தல் அமைப்பதற்குரிய பொருட்களும் வாகனத்தில் ஏற்றிவரப்பட்ட நிலையில் போலீசாரின் அழுத்தத்தினால் பந்தல்பொருட்கள் அங்கிருந்து எடுத்துச்செல்லப்பட்டன.
ஆர்ப்பாட்டக்காரர்களைத் தாக்கிய போலீசார்
இவ்வாறு தொடர்ச்சியாக வீதிமறியலில் ஆர்ப்பாட்டக்காரர்கள் இருந்தனர். ஆர்ப்பாட்டக்காரர்களின் இந்த தொடர்ச்சியான அழுத்தங்காரணமாக கடற்படைமுகாமிற்குள் அளவீடச்சென்ற முல்லைதீவு பிரதேச நிலஅளவையாளர் பா.நவஜீவன், அளவீட்டு முயற்சியைக் கைவிட்டு கடற்படை முகாமிற்கு வெளியே வந்தார்.
இந் நிலையில் அவரின் வாகனத்தினைச் சுற்றிவளைத்த ஆர்ப்பாட்டக்காரர்களை பாதுகாப்புத்தரப்பினர் தள்ளியதுடன், தாக்கியுமிருந்தனர்.
இவ்வாறாக ஆர்ப்பாட்டக்காரர்களிடமிருந்து நில அளவையாளர் பா.நவஜீவனையும் அவரின் வாகனத்தினையும் போலீசார் மீட்டு, அவரை புதுக்குடியிருப்பு ஊடாக, கேப்பாப்புலவு வழியே அவரை அனுப்பிவைத்திருந்தனர்.
கடற்படை முகாமிற்குள் நடந்தது என்ன; முறையான முடிவு வேண்டும் ஆர்பாட்டக்காரர்கள் கோிக்கை.
இராணுவ முகாமிற்குள் அளவீடு நடந்ததா? என்பது தொடர்பில் தங்களுக்கு நிலஅளவையாளர் வருகைதந்து தமக்கு விளக்கமளிக்கவேண்டுமெனவும், இந்தப் பிரச்சினைக்கு முறையானதொரு முடிவினையும் உரியவர்கள் தெரிவிக்கவேண்டுமெனத் தெரிவித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காணி அளவீடுதொடர்பில் கலந்துரையாடல் நடத்துவதெனவும்; அதுவரை நில அளவீடுகள் நிறுத்திவைப்பதாகவும் முடிவு
இந் நிலையில் அங்கு வருகைதந்த முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், நில அளவைத்திணைக்கள மாவட்ட அதிகாரியுடன் தொடர்புகொண்டு ஆர்ப்பாட்ட இடத்திற்கு அவரை அழைத்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து குறித்த இடத்திற்கு வருகைதந்த முல்லைத்தீவு மாவட்ட நிலஅளவைத்திணைக்கள அதிகாரியும், முல்லைத்தீவுமாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரனும் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பேசியிருந்தனர்.
அதிலே குறிப்பாக கடற்படை, காணிகளுக்குரிய மக்கள் மற்றும், உரிய திணைக்கள அதிகாரிகளுடன் மாவட்டசெயலகத்தில் ஓர் கலந்துரையாடல் இடம்பெற்று, அந்த கலந்துரையாடலின் அடிப்படையிலேயே நில அளவீடுதொடர்பில் முடிவு எடுக்கப்படும் எனவும், அதுவரை நில அளவைச் செயறபாடுகள் இடம்பெறாது என்ற இணக்கமான முடிவொன்று எடுக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.
மேலும் குறித்த ஆர்ப்பாட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன், கஜேந்திரகுமார் பென்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், வினோ நோகராதலிங்கம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், எம்.கே.சிவாஜிலிங்கம், கரைதுறைப்பற்று பிரதேசசபைத் தவிசாளர் க.விஜிந்தன், பிரதேசசபை உறுப்பினர்களான சி.லோகேஸவரன், க.ஜெனமேஜயந், விஜயகுமார், தி.இரவீந்திரன், சட்டத்தரணி இ.தனஞ்சயன் ஆகியோருடன், காணிக்குரிய மக்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#முல்லைத்தீவு